'உலக கோப்பையை விட பும்ராதான் முக்கியம்' இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


உலக கோப்பையை விட பும்ராதான் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 15 Oct 2022 11:41 PM GMT (Updated: 16 Oct 2022 12:47 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதுகில் உள்ள எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

பும்ராவின் காயம் குறித்து நிறைய மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தோம். ஆனால் யாரும் திருப்திகரமான பதிலை கொடுக்கவில்லை. இந்த உலக கோப்பை போட்டி முக்கியமானது தான். ஆனால் அதை விட அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது. அவருக்கு தற்போது 27-28 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டி உள்ளது. காயத்துடன் அவரை உலக கோப்பை போட்டியில் விளையாட வைப்பது மிகவும் 'ரிஸ்க்' ஆகும். நாங்கள் பேசிய அனைத்து டாக்டர்களும் இதையே சொன்னார்கள்.

இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு எஞ்சி இருக்கிறது. இந்திய அணிக்காக மேலும் பல போட்டிகளில் விளையாடி வெற்றி தேடித்தருவார். ஆனால் அவர் அணியில் இல்லாதது இழப்பு தான்.

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டு உள்ளார். ஷமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2-3 வாரங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்பட்ட அவர் 10 நாட்களாக கடுமையாக உழைத்து முழு உடல்தகுதியை எட்டி இருக்கிறார். 3-4 பயிற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். எல்லாமே அவருக்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது.

நாங்கள் நாளை (அதாவது இன்று) பிரிஸ்பேனில் பயிற்சி மேற்கொள்ள உள்ளோம், ஷமியும் அணியினருடன் இணைந்து பயிற்சி செய்வார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story