2வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி


2வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
x

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

கேன்டர்பரி,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் கேன்டர்பரி நகரில் நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் மந்தனா அகியோர் களம் இறங்கினர்.

இதில் ஷபாலி 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து மந்தனாவுடன் விக்கெட் கீப்பர் யாஷ்டிகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக ஆடியது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக உயர்ந்த போது யாஷ்டிகா 26 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து மந்தனாவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து 40 ரன்கள் எடுத்த நிலையில் மந்தனா ஆட்டம் இழந்தார். அடுத்து ஹார்லீன் களம் இறங்கினார். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்-ஹார்லீன் இணை 113 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஹார்லின் 58 ரன்னுக்கும், அடுத்து வந்த பூஜா 18 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் டாமி பேமவுண்ட் மற்றும் எம்மா லேம்ப் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பேமவுண்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டங்க்லி 1 ரன்னும், லேம்ப் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தாக அலீஸ் கேப்சே மற்றும் வியாட் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பின்னர் இந்த ஜோடியில் கேப்சே 39 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்தாக வியாட்டுடன், எமி ஜோன்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியாட் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் சார்லோட் டீன் மட்டும் சிறப்பாக ஆடி 37 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் லேரேன் பெல் 11 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 44.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளும், ஹேமலதா 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.


Next Story