கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம் - ரோகித் சர்மா


கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம் - ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 26 Sep 2022 10:20 AM GMT (Updated: 26 Sep 2022 10:21 AM GMT)

பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர், அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

ஹைதராபாத்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

ஐதராபாத் ஒரு சிறப்பான இடம். இந்தியா அணி மற்றும் ஐ.பி.எல். போட்டி என எங்களுக்கு நிறைய நினைவுகள் உண்டு. இது ஒரு சிறந்த தருணம். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அதை சிறப்பாக செய்தோம். வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகப்பெரிய பலமாகும்.

சில நேரங்களில் நிறைய விஷயங்களை செய்யும்போது தவறு செய்யலாம். இது 20 ஓவர் கிரிக்கெட். தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கான வாய்ப்புகளை எடுத்து கொண்டு தைரியமாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். அது சில நேரங்களில் வராமல் போகலாம்.

ஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சிறப்பான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story