நாளை தொடங்கும் டி20 உலக கோப்பை: ஒரே மேடையில் 16 அணிகளின் கேப்டன்கள்... வைரலாகும் புகைப்படம்


நாளை தொடங்கும் டி20 உலக கோப்பை: ஒரே மேடையில் 16 அணிகளின் கேப்டன்கள்... வைரலாகும் புகைப்படம்
x

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.

நாளைய தினம் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன.

போட்டிக்கு முன்னதாக இன்று ஐசிசி சார்பில் 16 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர்.

உலகக் கோப்பைக்கான பயிற்சிகள் குறித்து அந்தந்த அணியின் கேப்டன் செய்தியாளர்களிடம் பேசினர். மேலும் அவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.இந்த புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story