உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானின் தோல்வி... இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு அதிகரிப்பு...!


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானின் தோல்வி... இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு அதிகரிப்பு...!
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.

அதன்படி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப்போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

தற்போதுள்ள புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிடாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.

பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது. இந்நிலையில் அதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது .

அதன்படி, பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்கு எஞ்சி உள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி வெளியேற வேண்டியது தான். அதே வேளையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

பின்னர் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளையும் கைப்பற்றினால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விடுவார்கள். இதனால் இந்தியா விளையாட உள்ள வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.


Next Story