உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா, சிலி அணிகளுக்கு சிக்கல்


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா, சிலி அணிகளுக்கு சிக்கல்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:00 PM GMT (Updated: 6 Sep 2017 8:04 PM GMT)

2018-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

மோன்ட்வீடியோ,

 ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். 5-வது இடம் பெறும் அணி ‘பிளே-ஆப்’ சுற்றில் வெற்றி பெற்றால் தகுதி பெற முடியும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெனிசுலாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. அதுவும் வெனிசுலா அணி அடித்த சுய கோலால் தான் அர்ஜென்டினா அணி தோல்வியில் இருந்து தப்பியது. மற்றொரு ஆட்டத்தில் சிலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும், பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில ஈகுவடாரையும் வீழ்த்தியது. பிரேசில்-கொலம்பியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த பிரிவில் இருந்து பிரேசில் அணி (37 புள்ளிகள்) மட்டும் தகுதி பெற்று இருக்கிறது. உருகுவே (27 புள்ளிகள்) 2-வது இடத்திலும், கொலம்பியா (26 புள்ளிகள்) 3-வது இடத்திலும், பெரு (24 புள்ளிகள்) 4-வது இடத்திலும் இருக்கின்றன. அர்ஜென்டினா அணி 6 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

இதனால் இரு அணிகளும் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. அடுத்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா அணி, பெருவையும் (அக்டோபர் 5-ந் தேதி), ஈகுவடாரையும் (அக்டோபர் 10-ந் தேதி) எதிர்கொள்கிறது. சிலி அணி, ஈகுவடார் (அக்டோபர் 5-ந் தேதி), பிரேசில் (அக்டோபர் 10-ந் தேதி) அணிகளுடன் மோதுகிறது.

Next Story