ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு


ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு
x
தினத்தந்தி 14 Dec 2017 10:19 PM GMT (Updated: 14 Dec 2017 10:19 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி.

புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் 35-வது நிமிடத்தில் புனே வீரர் ஈசாக் தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் அடில்கான் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கி அட்டகாசப்படுத்தினார். முதல் பாதியில் புனே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில், 56-வது நிமிடத்தில் புனே வீரர் பல்ஜித் சைனி 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் புனே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி பெங்களூரு வீரர் மிகு 64 மற்றும் 74-வது நிமிடங்களில் கோல் போட்டு அசத்தினார். கடைசி நிமிடத்தில் பெங்களுரு நட்சத்திர வீரர் சுனில் சேத்ரியும் தனது பங்குக்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணி 4 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 6-வது ஆட்டத்தில் ஆடிய புனேவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.

Next Story