ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை-கோவா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை-கோவா ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 10 March 2018 10:15 PM GMT (Updated: 10 March 2018 10:02 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை-கோவா ஆட்டம் டிராவில் முடிந்தது.

கோவா,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி., எப்.சி.கோவா, எப்.சி.புனே சிட்டி ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. புனேயில் நடந்த முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் எப்.சி.புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் கோவாவில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 64-வது நிமிடத்தில் கோவா வீரர் மானுல் லான்ஜரோட் கோல் அடித்தார். 71-வது நிமிடத்தில் சென்னை அணி பதில் கோல் திருப்பியது. கிரிகோரி நெல்சன் கடத்தி கொடுத்த பந்தை அனிருத் தபா கோலுக்குள் திணித்தார். பந்து அதிக நேரம் (63 சதவீதம்) கோவா அணியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சென்னை அணி தான் இலக்கை நோக்கி அதிகமாக பந்தை உதைத்தது. முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பெங்களூருவில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதியின் 2-வது சுற்றில் புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மறுபடியும் மோதுகின்றன.

Next Story