ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணி 2-வது முறை சாம்பியன் இறுதிஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணி 2-வது முறை சாம்பியன் இறுதிஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது
x
தினத்தந்தி 17 March 2018 10:15 PM GMT (Updated: 17 March 2018 10:14 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

பெங்களூரு,

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து


4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில், பெங்களூரு கான்டீரவா ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யும், பெங்களூரு எப்.சி.யும் பலப்பரீட்சையில் இறங்கின.

உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த பெங்களூரு அணி 9-வது நிமிடத்திலேயே கோல் போட்டது. அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சீறிப்பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கினார். ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி ஆட்டத்தில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான்.

ஆனால் அவர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. 17-வது நிமிடத்தில் சென்னை வீரர் கிரிகோரி நெல்சன் கோல்பகுதியை நோக்கி தூக்கியடித்த பந்தை, சக வீரர் மைல்சன் ஆல்வ்ஸ் துள்ளி குதித்து தலையால் முட்டினார். அது கம்பத்தில் பட்டு வலைக்குள் நுழைந்து கோலாக மாறியது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட, ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. 30-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் அடித்திருக்க வேண்டியது. அவர்களின் ஷாட்டை, கோல் கம்பத்தின் அருகில் நின்ற சென்னை வீரர் இனிகோ கால்ட்ரோன் தலையால் முட்டி வெளியே தள்ளினார்.

மைல்சன் கலக்கல்

பந்து இரு அணியினரிடமும் சரிசம வாய்ப்பிலேயே பயணித்தது. இப்படி நீயா-நானா? என்று மோதல் கடுமையாக நீடித்த நிலையில் 45-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோல் அடித்து அமர்க்களப்படுத்தியது. கார்னர் பகுதியில் இருந்து கிரிகோரி நெல்சன் உதைத்த ஷாட்டை, இந்த முறையும் மைல்சன் ஆல்வ்ஸ் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார். இதன் மூலம் சென்னை அணியினரின் நம்பிக்கை அதிகரித்தது. 67-வது நிமிடத்தில் சென்னை அணி மீண்டும் ஒரு கோல் அடிக்க, பெங்களூரு அணி நிலைகுலைந்து போனது.

கிரிகோரி நெல்சனிடம் இருந்து வந்த பந்துடன் கோல் நோக்கி முன்னேறிய ஜெஜெ லால்பெகுலா தன்னை எதிரணியின் இரண்டு வீரர்கள் சுற்றி வளைத்ததும் சுதாரித்துக் கொண்டு சக வீரர் ரபெல் அகஸ்டோவின் பக்கம் பந்தை தட்டிவிட்டார். அவர் அதை லாவகமாக கோல் நோக்கி உதைத்தார். வெளியே செல்வது போல் சென்ற பந்து வலைக்குள் திரும்பி கோலானது. இதனால் சென்னை அணி 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலை கண்டது.

சென்னை அணி சாம்பியன்

இதையடுத்து பதற்றத்திற்குள்ளான பெங்களூரூ வீரர்கள் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டினர். 85-வது நிமிடத்தில் எளிதான கோல் வாய்ப்பை பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி கம்பத்திற்கு மேலாக அடித்து வீணாக்கினார். கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு கோல் போட்டார்.

முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. சென்னை அணி மகுடம் சூடுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு பட்டம் வென்று இருந்தது. தொடர்ந்து 10 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத பெங்களூரு அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்விவிட்டது.

சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய சென்னை அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தங்க ஷூ யாருக்கு?

இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்த கோவா அணி வீரர் பெரான் கோரோமினாசுக்கு (18 கோல்) தங்க ஷூ விருதும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுப்ரதா பாலுக்கும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்கான விருதை பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரியும் பெற்றனர்.

Next Story