சாம்பியன்ஸ் லீக் கால்பந்து-கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து-கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி
x
தினத்தந்தி 4 April 2018 10:45 PM GMT (Updated: 4 April 2018 6:54 PM GMT)

கால்இறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி, அந்தரத்தில் பல்டியுடன் கோல் அடித்து அசத்தினார் ரொனால்டோ.

துரின்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், இத்தாலியின் துரின் நகரில் நடந்த கால்இறுதியின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)-யுவென்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை வீழ்த்தியது. இதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல் ) 3-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 64-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் டானி கார்வஜல், கோல் எல்லையின் அருகில் நின்ற ரொனால்டோவை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை யுவென்டஸ் அணியின் பின்கள வீரர் மாட்டியா டி சிஜிலியோ தலையால் முட்டி தடுக்க முயன்றார். அதற்குள் மின்னல் வேகத்தில் துள்ளிக் குதித்த ரொனால்டோ அந்தரத்தில் பறந்த நிலையில் ‘பைசைக்கிள் கிக்’ மூலம் அற்புதமாக பந்தை கோலுக்குள் திருப்பி அனைவரையும் அசர வைத்தார்.

ரொனால்டோவின் வியக்க வைத்த ஷாட்டை பார்த்து ஸ்டேடியமே கரகோஷத்தால் அதிர்ந்தது. எதிரணி ரசிகர்களும் ரொனால்டோ அடித்த கோலை கண்டு வியந்து பாராட்டினார்கள். கண்கொள்ளா காட்சியாக அமைந்த ரொனால்டோவின் கோல் ஷாட் வீடியோவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சமூக வலைதளங்களில் ரொனால்டோவின் அசத்தலான கோல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கால்பந்து உலகினரும் ரொனால்டோவின் இந்த கோலை புகழ்ந்து இருக்கிறார்கள். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.

33 வயதான ரொனால்டோ கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் நான் அடித்த 2-வது கோல் குறித்து மக்கள் அதிகம் பேசுகிறார்கள். உண்மையிலேயே அந்த கோல் வியப்புக்குரிய வகையில் இருந்தது. அனேகமாக எனது வாழ்க்கையில் இது தான் சிறந்த கோலாக இருக்கும். இந்த கோல் எனது வாழ்க்கையில் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும்’ என்றார்.

Next Story