சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை


சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை
x
தினத்தந்தி 16 May 2018 10:30 PM GMT (Updated: 16 May 2018 8:35 PM GMT)

சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ததால் சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரியாத்,

கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அல் இத்திஹாத் அணியின் தலைமை நிர்வாகி ஹமத் அல் செனாயியை, இறுதிப்போட்டிக்கு முன்பு சர்வதேச கால்பந்து நடுவர் பஹத் அல் மிர்டாசி சந்தித்து ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து ஹமத் அல் செனாயி உடனடியாக சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சவூதி அரேபியா போலீசார், 32 வயதான சர்வதேச கால்பந்து நடுவரான பஹத் அல் மிர்டாசியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இது குறித்து ஆய்வு செய்த சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனம் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்ட நடுவர் பஹத் அல் மிர்டாசிக்கு கால்பந்து தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆயுட்கால தடை விதித்தது.

ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில் நடுவர் பஹத் அல் மிர்டாசிக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து சம்மேளன நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் சவூதி அரேபியாவை சேர்ந்த நடுவரான பஹத் அல் மிர்டாசியை அந்த பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று சவூதி அரேபியா கால்பந்து சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story