100–வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடுகிறார், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி


100–வது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடுகிறார், இந்திய கேப்டன் சுனில் சேத்ரி
x
தினத்தந்தி 3 Jun 2018 9:00 PM GMT (Updated: 3 Jun 2018 8:45 PM GMT)

4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5–0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2–வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100–வது சர்வதேச போட்டியாகும்.

33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2–வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார்.

முன்னதாக சீனதைபேக்கு எதிரான ஆட்டத்தின் போது சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த போதிலும் அந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மனம் வெதும்பிய சேத்ரி, கால்பந்து போட்டியை பார்க்க மைதானத்திற்கு வரும்படியும், அங்கு வந்து ரசித்து விமர்சிக்கும்படியும் ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். ‘எனது நண்பர் சுனில் சேத்ரியின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, கால்பந்து போட்டிக்கு ஆதரவு கொடுங்கள், அதற்கான முயற்சியில் இறங்குங்கள்’ என்று இந்திய கேப்டன் விராட் கோலியும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story