கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றிய ரசிகர்கள்


கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றிய ரசிகர்கள்
x
தினத்தந்தி 4 Jun 2018 2:13 PM GMT (Updated: 4 Jun 2018 2:13 PM GMT)

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் கோரிக்கையை ரசிகர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

மும்பை,

4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.

முன்னதாக,  சீனத் தைப்பே அணியுடனான போட்டியைக் காண 2500 ரசிகர்கள் மட்டுமே அரங்கில் இருந்தனர். அரங்கில் 90 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தன. இது குறித்து மிகுந்த வேதனையுடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் அதில் கூறுகையில், இந்திய கால்பந்து அணிக்கு மக்களும், ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, குர்னல் பாண்டியா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். ரசிகர்கள் கால்பந்து போட்டிக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்துப் போட்டிகளும் சரிசமமான முக்கியத்துவத்தோடு வளர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்குக் கால்பந்து போட்டிக்கு அனைத்து ரசிகர்களும் முடிந்தவரை ஆதரவு அளிக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து இன்று இரவு 8 மணிக்கு மும்பை அந்தேரி பகுதியில் உள்ள கால்பந்து அரங்கில், இந்தியா- கென்யா அணிகளுக்கு இடையிலான கால்பந்து லீக் போட்டி நடைபெற உள்ளது. சுனில் சேத்ரியின் கோரிக்கையை ரசிகர்கள்  நிறைவேற்றியுள்ளனர்.  மைதானத்தில் உள்ள அனைத்து இருக்கைக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு இந்தப் போட்டி 100-வது கால்பந்துப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story