கால்பந்து துளிகள்...


கால்பந்து துளிகள்...
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 8:06 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷியா-சவுதி அரேபியா அணிகள் மோதின.


* ரஷிய பெண் அரசியல்வாதியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான பாராளுமன்ற கமிட்டியின் தலைவியுமான தமரா பிளட்டினோவா, அந்த நாட்டு ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறுகையில், ‘உலக கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண ரஷியா வரும் வெளிநாட்டு ரசிகர்களுடன், பெண்கள் யாரும் உறவு வைத்து கொள்ளாதீர்கள். வெளிநாட்டு ரசிகர்களை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றாலும், 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வெளிநாட்டு உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் சந்தித்தது போன்ற பாதிப்பை தான் இந்த குழந்தைகளும் சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

* சுவீடன் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான இப்ராஹிமோவிச் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அணியில் இருக்கும் போது நாங்கள் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று எங்கள் நாட்டு மக்கள் எல்லோரும் விரும்புவார்கள். அணியில் நான் இல்லாத காரணத்தால் சுவீடனுக்கு குறைவான நெருக்கடி இருப்பதாகவே கருதுகிறேன். நெருக்கடி இல்லாததால் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

* ரஷியாவில் நேற்று தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்காக சவுதி அரேபியா அணி களம் இறங்கும் போது, அந்த அணியின் வீரர்களுக்கு முன்பாக தேசிய கொடியேந்தி செல்ல 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சவுதி அரேபியா பெண்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்றைய போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்டு இருந்த சவுதி அரேபியா பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நடைமுறை சிக்கல் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் சவுதி அரேபியா பெண்கள் கலந்து கொள்ளாததற்கான காரணம் என்ன? என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

Next Story