உலககோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி


உலககோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி
x
தினத்தந்தி 2 July 2018 11:56 PM GMT (Updated: 2 July 2018 11:56 PM GMT)

உலககோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜிய அணி. #FifaWorldCup2018

மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு 11.30 மணிக்கு நாக் அவுட் சுற்று நடைபெற்றது. ரோஸ்டோவ் ஆன்-டான் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பெல்ஜியம் அணி, ஆசிய அணியான ஜப்பானை எதிர்கொண்டது. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும், தங்கள் அணிக்கான கோல் கணக்கை துவக்க முனைப்புடன் செயல்பட்டனர். இருப்பினும் ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோலும் விழாததால் இரு அணிகளும் சமனிலையிலேயே இருந்தன. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் ஜப்பான் அணி வீரர் ஜென்கி ஹராகுசீ கோல் அடிக்க ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலே மற்றொரு ஜப்பான் அணி வீரர் டாகாஷி இனுய் அசத்தலான கோல் அடிக்க அந்நாட்டு ரசிகர்கள் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்து தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தினர். 

இருப்பினும் இவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் ஜான் வெர்டோன்கென் கோல் அடிக்க, மரோவ்னே ஃபெல்லாய்னீ 74வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து பெல்ஜிய நாட்டு ரசிகர்களை தலை நிமிர செய்தார். இந்நிலையில் போட்டியானது டிராவில் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் நாசெர் சாட்லீ கோல் அடித்து ஜப்பான் அணியின் காலிறுதி கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார். இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜிய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Next Story