போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்


போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்
x
தினத்தந்தி 4 July 2018 11:58 AM GMT (Updated: 4 July 2018 11:58 AM GMT)

போலியாக நடிப்பதாக விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து நான் நடிக்கிறேனா என நெய்மர் கோபம் அடைந்துள்ளார். #Neymar


உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் (51-வது நிமிடம்), பிர்மினோ (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

முன்னதாக 71-வது நிமிடத்தில் நெய்மாரின் கணுக்காலில் மெக்சிகோ வீரர் மிக்யூல் லாயூன் மிதித்ததால் மைதானத்தில் விழுந்து துடித்தார். வலது காலை பிடித்துகொண்டு உருண்டு, புரண்டு அலறினார். சக வீரர்கள், போட்டி நடுவர் மற்றும் மருத்துவ குழுவினர் அவரை சூழ்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பிய நெய்மார் பிறகு ஆட்டம் முழுவதும் விளையாடினார்.

காயம் அடைந்ததும் நெய்மார் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய விதம் கொஞ்சம் மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும், கால்பந்து உலகிலும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘இந்த நடிப்புக்காக அவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்’ என்று சில ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளனர்.

இது குறித்து நெய்மர் கூறியதாவது;-

இவை என்னை கவிழ்ப்பதற்காக கூறப்படுவதேயன்றி வேறில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும். கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன்.

காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர். என் சகாக்களுடன் வெற்றிபெறவே நான் இங்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்த தொடரில் இதுவரை 23 ஷாட்டுகள் அடித்துள்ள 26 வயதான நெய்மார் அதில் 2-ஐ கோலாக மாற்றி இருக்கிறார். எதிரணியினரால் அதிக முறை ‘பவுல்’ (23 முறை) செய்யப்பட்ட வீரரும் நெய்மார் தான். அவர் கூறுகையில், ‘இந்த தொடரில் மற்றவர்களை காட்டிலும் என்மீதே அதிகமாக தாக்குதல் தொடுத்து, அதன் மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். பொதுவாக விமர்சனங்களையோ அல்லது பாராட்டுகளையோ எதையும் நான் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அதன் மீது கவனம் செலுத்தினால், அது நமது செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனது வேலை, களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே’ என்றார். 

Next Story