ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு நெருக்கடி எதுவும் இல்லை - பயிற்சியாளர் கிரிகோரி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு நெருக்கடி எதுவும் இல்லை - பயிற்சியாளர் கிரிகோரி
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 9:07 PM GMT)

‘நடப்பு சாம்பியன் என்பதால் சென்னையின் எப்.சி. அணிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார்.

சென்னை,

10 அணிகளுக்கு இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொல்கத்தாவில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணியை (30-ந் தேதி) சந்திக்கிறது.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) வீரர்களை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடப்பு சாம்பியன் என்பதால் சென்னையின் எப்.சி. அணிக்கு நெருக்கடி எதுவும் இல்லை. அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர். எங்கள் அணி இந்த போட்டி தொடருக்காக சிறப்பான பயிற்சியை எடுத்துள்ளது. மலேசியா மற்றும் கோவாவில் நடந்த பயிற்சி முகாமை முடித்து தயார் நிலையில் இருக்கிறோம். இந்த முறையும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஐ லீக் போட்டியில் இருந்து சீனிவாச பாண்டியன் அணியில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் திறமையான வீரர். இந்த போட்டி தொடரில் அவருக்கு அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை பெறுவது அவரது கையில் தான் உள்ளது. எங்கள் கையில் எதுவும் கிடையாது. எந்த அணியுடன் மோதுவது என்பது முக்கியம் அல்ல. ஆட்டத்தில் நமது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் முடிவு இருக்கும். தமிழக வீரர் தனபால் கணேசின் காயம் குறித்து தற்போது எதுவும் முடிவு சொல்ல முடியாது. போட்டி தொடங்கிய பிறகு அவரது உடல் தகுதி குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story