ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 1 Oct 2018 11:15 PM GMT (Updated: 1 Oct 2018 9:15 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா-கவுகாத்தி அணிகள் இடையிலான ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது.

கவுகாத்தி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-கோவா அணிகள் மல்லுகட்டின. இதில் பலம் வாய்ந்த கோவா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுகாத்தி அணியினர் ஈடுகொடுத்து ஆடினர். கோவா கோல் கீப்பர் முகமது நவாஸ் செய்த தவறால் 8-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் பெடரிகோ காலெகோ கோல் அடித்தார். அதாவது தனது பகுதியை விட்டு வெளியே வந்து பந்தை பிடித்த முகமது நவாஸ் அது ஆப்-சைடு என்று அறிவிக்கப்படும் என்று நினைத்தார். ஆனால் நடுவரோ உடனடியாக பிரிகிக் வாய்ப்பு வழங்கினார். அவர் திரும்புவதற்குள் பந்தை பெடரிகோ கோலாக மாற்றினார்.

இதன் பின்னர் 14-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்த கோவா அணியின் நட்சத்திர வீரர் பெரன் கோராமினோஸ் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் எதிரணியின் மூன்று தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கோராமினோஸ் மீண்டும் ஒரு கோல் போட்டார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள தவறினர். 53-வது நிமிடத்தில் கவுகாத்தி கேப்டன் பார்த்தோலோம் ஓக்பேச் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.


Next Story