ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 14 Dec 2018 11:00 PM GMT (Updated: 14 Dec 2018 8:14 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.

சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோசுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த முறை எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று 5 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடம் வகிக்கிறது. ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி உள்ளூரில் முதல் வெற்றிக்காக தீவிரம் காட்டும்.

இந்த சீசனில் வெற்றி பக்கமே செல்லாத ஒரே அணி டெல்லி டைனமோஸ் அணி தான். அந்த அணி 4 டிரா, 7 தோல்வி என்று 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட டெல்லி அணி முதல் வெற்றிக்காக போராடும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

போட்டி குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘நாங்கள் இனி அரைஇறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் எங்களுக்கு 7 லீக் ஆட்டங்கள் உள்ளன. முடிந்த வரை அதிக புள்ளிகளை பெற விரும்புகிறோம். ஐ.எஸ்.எல். போட்டியில் எந்த ஒரு அணியும் அடுத்தடுத்து கோப்பையை வெல்ல இயலாமல் போவதை பார்க்க வியப்பாக இருக்கிறது’ என்றார்.

இதற்கிடையே கோவாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) பந்தாடியது.



Next Story