ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்


ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 9:57 PM GMT)

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் அணிகள் இன்று மோத உள்ளன.

சார்ஜா,

24 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தரவரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113-ம் நிலை அணியான பக்ரைனுடன் இன்று சார்ஜாவில் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி சிக்கலின்றி அடுத்த சுற்றுக்கு (நாக்-அவுட் சுற்று) முன்னேறும். மாறாக தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். குறைந்தது ‘டிரா’வாவது செய்ய வேண்டியது அவசியமாகும். அதே சமயம் பக்ரைன் அணியும் (ஒரு தோல்வி, ஒரு டிரா) இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் மட்டுமே போட்டியில் நீடிக்க முடியும் என்பதால், களத்தில் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு இது 107-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் இந்திய தரப்பில் அதிக போட்டிகளில் பங்கேற்றவரான பாய்சுங் பூட்டியாவின் சாதனையை சமன் செய்ய இருக்கிறார்.

ஆசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்கேற்று இருப்பது இது 4-வது முறையாகும். ஆனால் ஒரு முறை கூட நாக்-அவுட் சுற்றை எட்டியது கிடையாது. 1964-ம் ஆண்டு தொடரில் 2-வது இடத்தை பிடித்தாலும் அது 4 அணிகள் இடையே லீக் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியாகும். எனவே இந்திய அணி நாக்-அவுட் சுற்றை எட்டினால் அது புதிய வரலாறாக அமையும். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் ஒளிபரப்பு செய்கிறது. அல் அய்னில் இதே நேரத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்- தாய்லாந்து அணிகள் சந்திக்கின்றன.


Next Story