ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 3 March 2019 9:53 PM GMT (Updated: 3 March 2019 9:53 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 90-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமேசை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் எடு கார்சியா (63-வது நிமிடம்), அங்கித் முகர்ஜீ (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இத்துடன் இந்த கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று நிறைவடைந்து விட்டது.

லீக் சுற்று முடிவில் பெங்களூரு எப்.சி (34 புள்ளி), எப்.சி.கோவா (34 புள்ளி), மும்பை சிட்டி (30 புள்ளி), நார்த் ஈஸ்ட் யுனைடெட் (29 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா உள்பட 6 அணிகள் நடையை கட்டின. வருகிற 7-ந்தேதி கவுகாத்தியில் நடக்கும் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

Next Story