ஐ.எஸ்.எல். கால்பந்தில் அரைஇறுதியின் முதலாவது சுற்று: பெங்களூருவை வீழ்த்தியது கவுகாத்தி


ஐ.எஸ்.எல். கால்பந்தில் அரைஇறுதியின் முதலாவது சுற்று: பெங்களூருவை வீழ்த்தியது கவுகாத்தி
x
தினத்தந்தி 7 March 2019 10:00 PM GMT (Updated: 7 March 2019 8:49 PM GMT)

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிந்து அரைஇறுதி சுற்று தொடங்கியுள்ளது.

கவுகாத்தி,

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிந்து அரைஇறுதி சுற்று தொடங்கியுள்ளது. இதில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)– பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று கவுகாத்தியில் நேற்றிரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 20–வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் ரெடீம் டிலாங், சற்று நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 82–வது நிமிடத்தில் பெங்களூரு பதில் கோல் திருப்பியது. கேப்டன் சுனில் சேத்ரி தட்டிக்கொடுத்த பந்தை, சக வீரர் ஸிஸ்கோ ஹெர்னாண்டஸ் வலைக்குள் திருப்பினார். ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில், கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஹர்மன்ஜோத் கப்ரா செய்த தவறு அந்த அணிக்கு வினையாக மாறியது. கோல் பகுதியில் வைத்து ஹர்மன்ஜோத் கப்ரா எதிரணி வீரரை கீழே தள்ளியதால் அவர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டதுடன், கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பை கவுகாத்தி வீரர் ஜூவான் மாஸ்சியா கோலாக மாற்ற, உள்ளூர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

முடிவில் கவுகாத்தி அணி 2–1 என்ற கணக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அடுத்து இவ்விரு அணிகளும் அரைஇறுதியின் 2–வது சுற்றில் வருகிற 11–ந்தேதி பெங்களூருவில் சந்திக்க உள்ளன. இதில் டிரா செய்தாலே கவுகாத்தி அணி இறுதிப்போட்டியை எட்டி விடலாம். பெங்களூரு அணியை பொறுத்தவரை 2 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிசுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும்.

மும்பை சிட்டி–எப்.சி.கோவா அணிகளுக்கு இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று மும்பையில் நாளை நடக்கிறது.


Next Story