ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி முதல்முறையாக ‘சாம்பியன்’


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 17 March 2019 11:15 PM GMT (Updated: 17 March 2019 10:56 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. 81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.

இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடினர். அவ்வப்போது உரசலும் ஏற்பட்டது. 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற கோவா வீரர் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அதே சமயம் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோற்று இருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் தோல்வி கண்டு இருந்தது. வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச்சேர்ந்த பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டார்.


Next Story