கோபா அமெரிக்கா கால்பந்து கொலம்பியா அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்கா கால்பந்து கொலம்பியா அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:30 PM GMT (Updated: 20 Jun 2019 9:46 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 1–0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

சாவ் பாவ்லோ, 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 1–0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

கால்இறுதியில் கொலம்பியா

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான கொலம்பியா அணி, ஆசிய சாம்பியனான கத்தாரை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 86–வது நிமிடத்தில் கொலம்பியா அணி வீரர் துவான் ஜபடா தலையால் முட்டி பந்தை கோலுக்குள் திணித்தார். முடிவில் கொலம்பியா அணி 1–0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது. முதல் லீக் ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை சாய்த்து இருந்த கொலம்பியா அணி 2 வெற்றியுடன் முதல் அணியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

அர்ஜென்டினா–பராகுவே ஆட்டம் ‘டிரா’

இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா–பராகுவே அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பராகுவே அணி வீரர் ரிச்சர்ட் சாஞ்சஸ் 37–வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதியில் பராகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

57–வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கோலாக்கினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டிராவின் மூலம் 1 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள அர்ஜென்டினா அணி தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் கத்தாரை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் அர்ஜென்டினா அணி கால்இறுதி வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.

மெஸ்சி வருத்தம்

போட்டிக்கு பிறகு அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி அளித்த பேட்டியில், ‘பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமானதாகும். கால்இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் நாங்கள் அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று தெரிவித்தார்.


Next Story