உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்


உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:25 PM GMT (Updated: 24 Jun 2019 11:25 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளன.

பாரீஸ்,

24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) இங்கிலாந்து-கேமரூன் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டீபானி ஹவுட்டன் 14-வது நிமிடத்திலும், எலென் ஒயிட் 45-வது நிமிடத்திலும், அலெக்ஸ் கிரீன்வுட் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்-பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பிரான்ஸ் அணி, பிரேசில் அணிக்கு கடும் சவாலாக விளங்கியது. பிரான்ஸ் அணி வீராங்கனை வாலெரி கெவின் 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரேசில் அணி வீராங்கனை தைசா டி மொரஸ் 63-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் (107-வது நிமிடம்) பிரான்ஸ் வீராங்கனை அமன்டின் ஹென்றி வெற்றிக்கான கோலை அடித்தார். முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது.


Next Story