ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி சிறப்பாக செயல்படும் பயிற்சியாளர் கிரிகோரி நம்பிக்கை


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி சிறப்பாக செயல்படும் பயிற்சியாளர் கிரிகோரி நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 9:05 PM GMT)

இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி சிறப்பாக செயல்படும் என்று அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி சிறப்பாக செயல்படும் என்று அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையின் எப்.சி.

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சியில் வருகிற 20-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கோவாவில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியின் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. அணியில் இடம் பிடித்துள்ள 25 வீரர்களில், 12 பேர் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ஆவர்.

வீரர்கள் அறிமுகத்துக்கு பின்னர் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆமதாபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் நடந்த பயிற்சி ஆட்டங்களில் விளையாடி எங்களது அணி நன்றாக தயாராகி இருக்கிறது. மேலும் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. அணியின் ஒருங்கிணைந்த செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர். அணியில் காயம் பிரச்சினை எதுவும் பெரிதாக இல்லை. தற்போதைய நம்முடைய தயார்படுத்துதலையும், உத்வேகத்தையும் புதிய சீசனுக்கு சரியாக எடுத்து செல்ல வேண்டியது மிகவும் முக்கியமானது. கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சென்னையின் எப்.சி. சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.

தமிழக வீரர்கள் நம்பிக்கை

சென்னையின் எப்.சி. அணியில் தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேஷ், எட்வின் வன்ஸ்பால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். தனபால் கணேஷ் கூறுகையில், ‘கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. இந்த சீசனை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். இந்த போட்டி தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். களம் காணும் அணியில் இடம் பெறுவது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது குறித்து பயிற்சியாளர் தான் முடிவு செய்வார். வரும் காலங்களில் ஐ.எஸ்.எல். போட்டியில் மட்டுமின்றி தேசிய அணியிலும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் இடம் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

எட்வின் வன்ஸ்பால் பேசுகையில், ‘சென்னையின் எப்.சி. அணியில் முதல்முறையாக இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி இருக்கிறது. வலது பின்கள வீரராக நான் விளையாடி வருகிறேன். எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.

அணியினர் விவரம்

இந்த சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: கரண்ஜித் சிங், விஷால் கைத், சஞ்சிபான் கோஷ், பின்களம்: எலி சபியா (பிரேசில்), லூசியன் கோய்ன் (ருமேனியா), ஜெர்ரி லால்ரின்ஜூலா, எட்வின் வன்ஸ்பால், டோண்டான்பா சிங், லால்டின்லியானா ரெந்த்லி, ஜோமிங்லியானா ரால்ட், ஹென்றி அந்தோணி, ரீம்சோசுங் அய்மோல், தீபக் தாங்ரி, நடுகளம்: தனபால் கணேஷ், மாசிக் சைகானி (ஆப்கானிஸ்தான்), தோய் சிங், அனிருத் தபா, ஜெர்மன்பிரீத் சிங், லாலியன்ஜூலா சாங்தே, ரபெல் கிரிவெல்லாரோ (பிரேசில்), டிராகோஸ் பிர்டுலெஸ்கு (ருமேனியா), முன்களம்: நெர்ஜஸ் வால்கிஸ் (லிதுவேனியா), ஆந்த்ரே ஸ்கீம்பிரி (மால்டா), ஜெஜெ லால்பெகுலா, ரஹிம் அலி.

Next Story