ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா-பெங்களூரு ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 29 Oct 2019 12:20 AM GMT (Updated: 29 Oct 2019 12:20 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எப்.சி.கோவா-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் நேற்று இரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த எப்.சி.கோவா அணியுடன் மோதியது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பெங்களூரு அணி வீரர் உதன்டா 62-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோவா அணி வீரர் கோரோமினாஸ் 90-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்த சென்னையின் எப்.சி. அணி உள்ளூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெற்றியை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின் பாதியிலும் சென்னை அணி கோல் போட முனைப்பு காட்டினாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சென்னை அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலமுறை வீணானது. 90-வது நிமிடத்தில் 2-வது மஞ்சள் அட்டை பெற்ற மும்பை சிட்டி அணி வீரர் சக்ரபர்த்தி வெளியேற்றப்பட்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. டிரா செய்ததன் மூலம் சென்னை அணி ஒரு புள்ளி பெற்றது.

ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story