ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 25 Nov 2019 11:13 PM GMT (Updated: 25 Nov 2019 11:13 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி. அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 44-வது நிமிடத்தில் ஐதராபாத் அணி வீரர் ராபின்சிங் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு நூலிழையில் வெளியேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி கட்ட (இஞ்சுரி டைம்) ஆட்டம் விருந்து படைப்பதாக இருந்தது. கடைசி 2 நிமிடம் இருக்கையில் சென்னை அணி வீரர் ஆந்த்ரே ஸ்கெம்பிரி முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே ஐதராபாத் அணி வீரர் கில்காலோன் பதில் கோல் திருப்பினார். ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்த போது சென்னை அணி வீரர் நெர்ஜூஸ் வல்ஸ்கிஸ் 2-வது கோலை அடித்தார். இதனால் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

கோவாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.


Next Story