ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 4-வது தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 4-வது தோல்வி
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 8:02 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி கோவாவிடம் வீழ்ந்தது.

சென்னை, 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி கோவாவிடம் வீழ்ந்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவாவுடன் மல்லுகட்டியது.

இதில் முதல் பாதியில் வெகுவாக ஆதிக்கம் செலுத்திய கோவா அணியினர், சென்னை அணியின் முன்கள பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அசத்தினர். கோவா வீரர்கள் அகமது ஜாஹோவ் (26-வது நிமிடம்), பிரான்டன் பெர்னாண்டஸ் (41-வது நிமிடம்), ஹூகோ பவுமோஸ் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

0-3 என்று பின்னடைவுக்குள்ளான சென்னை வீரர்கள் பிற்பாதியில் மனம் தளராமல் ஆக்ரோஷமாக போராடினர். அதன் பலனாக ஸ்கெம்ப்ரி (57-வது நிமிடம்), ரபெல் கிரிவெல்லாரோ (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மீண்டும் ஒரு கோல் அடித்து சமனுக்கு கொண்டு வர முனைப்பு காட்டிய சமயத்தில் கோவா வீரர் பெர்ரன் கோரோமினாஸ் பந்தை வலைக்குள் அனுப்பி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு கடைசி நிமிடத்தில் கிரிவெல்லாரோ அடித்த கோல் சென்னை அணிக்கு கோல் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

சென்னை அணி தோல்வி

கடைசி கட்டத்தில் அவ்வப்போது உரசல்கள், வாக்குவாதம் தலைதூக்கின. 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற சென்னை அணியின் எட்வின் வன்ஸ்பால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் அவரால் விளையாட முடியாது. இது தவிர இரு அணியிலும் தலா 4 வீரர்கள் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 54 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோவா அணி முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்தது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களிலும் கோவா அணி வரிசையாக வெற்றி கண்டிருக்கிறது. இதன் மூலம் கோவா அணி 6 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 21 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி 2 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என்று 9 புள்ளியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

புவனேசுவரத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story