ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை


ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை
x
தினத்தந்தி 16 Feb 2020 9:26 PM GMT (Updated: 16 Feb 2020 9:26 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தா, 

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.யும், அட்லெடிகோ டி கொல்கத்தாவும் மல்லுகட்டின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை வீரர்கள் அடிக்கடி எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு ஷாட்டுகள் அடித்தனர். 7-வது நிமிடத்தில் ரபெல் கிரிவெலரோவும், 39-வது நிமிடத்தில் ஆந்த்ரே ஸ்கெம்ப்ரியும் கோல் அடித்து சென்னை அணிக்கு வலுவான முன்னிலையை ஏற்படுத்தி தந்தனர். 40-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணன் கோல் திருப்பினார். நடப்பு தொடரில் அவரது 14-வது கோல் இதுவாகும்.

பிற்பாதியில் ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர கொல்கத்தா வீரர்கள் கடுமையாக போராடிய போதிலும், சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை நட்சத்திர வீரர் வல்ஸ்கிஸ் கோல் போட்டார். 

முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்தது. 16-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி என்று 25 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. 

ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 4 வெற்றிக்கு பிறகு சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 19-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-கோவா அணிகள் மோதுகின்றன.

Next Story