ஐ.எஸ்.எல். கால்பந்தில் கவுகாத்திக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது, சென்னை அணி


ஐ.எஸ்.எல். கால்பந்தில் கவுகாத்திக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது, சென்னை அணி
x
தினத்தந்தி 25 Feb 2020 11:31 PM GMT (Updated: 25 Feb 2020 11:31 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்திக்கு எதிரான கடைசி லீக்கில் சென்னை அணி கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பித்து 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.

கவுகாத்தி,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 90-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) சந்தித்தது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மாசி சாய்கானி கோல் அடித்து சென்னை அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தார். 41-வது நிமிடத்தில் பந்துடன் கோல் பகுதிக்குள் நுழைந்த கவுகாத்தி வீரர் நின்தோயை, சென்னை வீரர் தோன்டோன்பா சிங் கீழே தள்ளிவிட்டார். இதனால் தோன்டோன்பா சிங் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதுடன், கவுகாத்தி அணிக்கு பெனால்டி வாய்ப்பினை நடுவர் வழங்கினார். இந்த வாய்ப்பை அந்த அணி வீரர் மார்ட்டின் சாவ்ஸ் கோலாக்கினார். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

இருப்பினும் தோன்டோன்பா இல்லாததால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. இதை கவுகாத்தி அணியினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். 71-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை கவுகாத்தி வீரர் திருப்பிய போது அதை சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் முன்னோக்கி வந்து பந்தை கையால் குத்தி விட்டார். ஆனால் பந்து மீண்டும் கவுகாத்தி வீரர்களின் வசம் செல்ல மார்ட்டின் சாவ்ஸ் அதை சூப்பராக வலைக்குள் அனுப்பி அசத்தினார். இதனால் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற கவுகாத்தி அணியினர் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர்.

வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்தை கணக்கிட்டு 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த கடைசி நிமிடத்தில் சென்னையின் மாற்று ஆட்டக்காரர் சாங்தே கோல் போட்டு அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த எப்.சி. கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி, சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டின.

சென்னை அணி அரைஇறுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த எப்.சி. கோவாவுடன் மோதுகிறது. மற்றொரு அரைஇறுதியில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன. ஒவ்வொரு அரைஇறுதியும் 2 ஆட்டங்களை கொண்டதாகும். கடைசி லீக்கில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி அரைஇறுதியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கும்.

சென்னை-கோவா இடையிலான அரை இறுதியின் முதலாவது சுற்று வருகிற 29-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்திலும், இதன் 2-வது சுற்று 7-ந்தேதி கோவாவிலும் நடக்கிறது.

Next Story