ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 9 March 2020 12:21 AM GMT (Updated: 9 March 2020 12:21 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தாவுக்கு எதிரான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் நடப்பு சாம்பியனான பெங்களுரு எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஆசிக் குருனியன் கோல் அடித்தார். இதனால் நெருக்கடிக்குள்ளான கொல்கத்தா அணியினர் தாக்குதல் பாணியை கையாண்டனர். இதன் பலனாக 30-வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணாவும், 63-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டேவிட் வில்லியம்சும் கோல் அடித்தனர். இதைத் தொடர்ந்து 79-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டி விட்டு கொல்கத்தா வீரர் பிரபிர் தாஸ் தூக்கியடித்த பந்தை, சக வீரர் டேவிட் வில்லியம்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். மேலும் ஒரு கோல் அடித்தால் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்று கடைசி கட்டத்தில் பெங்களூரு அணியினர் கடுமையாக போராடியும் பலன் இல்லை.

முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் கோல் எண்ணிக்கை அடிப்படையில் கொல்கத்தா அணி (3-2) இறுதிப்போட்டி வாய்ப்பை வசப்படுத்தியது.

2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வருகிற 14-ந்தேதி கோவாவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யுடன் மல்லுகட்டுகிறது.


Next Story