அர்ஜென்டினா, இத்தாலி கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு


அர்ஜென்டினா, இத்தாலி கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 March 2020 11:45 PM GMT (Updated: 22 March 2020 8:02 PM GMT)

அர்ஜென்டினா மற்றும் இத்தாலியை சேர்ந்த கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரோம், 

கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டையே நிலை குலைய செய்துவிட்டது. அங்கு 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த கொரோனா அரக்கன் கால்பந்து வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. இத்தாலியில் புகழ்பெற்ற யுவென்டஸ் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த முன்கள வீரர் பவுலா டைபாலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கும், எனது காதலி ஒரியானாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம்’ என்றார். 26 வயதான பவுலா டைபாலா அர்ஜென்டினா அணிக்காக 29 ஆட்டங்களில் ஆடி உள்ளார்.

இதே போல் இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஏ.சி. மிலன் கால்பந்து அணியின் தொழில்நுட்ப தலைவருமான பாலோ மல்டினி (வயது 51) மற்றும் அவரது மகன் டேனியல் (வயது 18) ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தந்தை, மகன் இருவரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைவராக 1995-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இருந்தவர் லோரென்ஜோ சான்ஸ். சமீபத்தில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான லோரென்ஜோ சான்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான லோரென்ஜோ சான்ஸ் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2 முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது நினைவுகூரத்தக்கது.

Next Story