உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் லாங்ஜெர்க்கு கொரோனா தொற்று உறுதி


உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் லாங்ஜெர்க்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 Jun 2020 11:39 PM GMT (Updated: 8 Jun 2020 11:39 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் லாங்ஜெர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


* 2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்த 31 வயதான மிட்செல் லாங்ஜெர்க், ஜப்பானில் உள்ள லீக் போட்டியில் பங்கேற்கும் நகோயா கிராம்பஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 4 மாத இடைவெளிக்கு பிறகு அடுத்த மாதத்தில் (ஜூலை) லீக் கால்பந்து போட்டி தொடங்க இருக்கிறது. இதற்காக ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மிட்செல் லாங்ஜெர்க்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

* நியூசிலாந்தில் கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அந்த நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் அந்த நாட்டில் ரக்பி போட்டிகள் அரங்கேற இருக்கின்றன. நியூசிலாந்து இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட அந்த நாட்டு அரசுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் இல்லாத நியூசிலாந்து. அனைவருக்கும் வாழ்த்துகள். திட்டமிடுதல், உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் என நியூசிலாந்துக்கே உரிய இயல்பினால் கிடைத்த வெற்றி இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அமிர் சோகைல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளங்கும் எல்லா வீரர்களின் ஆட்டமும் அணியின் சிறப்புக்கு உதவுவது கிடையாது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றையும், சிறப்பையும் பற்றி பேசினால் எல்லோருடைய மனதிலும் வரும் முதல் பெயர் ஜாவித் மியாண்டட் தான். அவருடைய சிறப்பு இப்போதும் பேசப்படுகிறது. ஏனெனில் அவர் தனது ஆட்ட தரத்துக்கு ஏற்ப அணியின் மற்ற வீரர்களின் ஆட்ட தரமும் உயர காரணமாக இருந்தார். அவருடன் இணைந்து விளையாடுகையில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். உங்கள் ஆட்டத்தில் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உத்வேகத்தையும் பெற முடியும். இதேபோல் தான் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விளங்குகிறார். அவரை சுற்றி இருக்கும் வீரர்களும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். அதனால் தான் விராட்கோலி சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு விக்கெட் வீழ்த்துவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை தேர்வாளர்கள் தைரியமாக சேர்க்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.




Next Story