சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பேயர்ன் முனிச்


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற பேயர்ன் முனிச்
x
தினத்தந்தி 24 Aug 2020 3:46 AM GMT (Updated: 24 Aug 2020 3:46 AM GMT)

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

லிஸ்பன்:

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றது. இந்த போட்டியின் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) மற்றும் பி.எஸ்.ஜி. பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன.

இதையடுத்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன் முனிச் அணியை எதிர்த்து முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த பி.எஸ்.ஜி. அணி மோதியது.

போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இரு அணிகளுக்கும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை தவறவிட்டன. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் (45 நிமிடங்கள்) இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது.

இடைவேளைக்கு பின் போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியது. இந்த பாதியில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என இரு அணிகளும் தீவிரமாக போராடின.

போட்டியின் 59-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் வீரர் கிங்ஸ்லி கமன் முதல் கோல் அடித்து அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 

இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணி முன்னிலை பெற்றது. இதனால் ஆட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியது. 

பி.எஸ்.ஜி. அணி வீரர்கள் தாங்களும் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதிவரை பி.எஸ்.ஜி. வீரர்களால் கோல் அடிக்கமுடியவில்லை. 

90 நிமிடங்கள் முடிவடைந்து போட்டியில் கூடுதலாக கடைசி 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. இந்த கடைசி 5 நிமிடங்களிலும் பி.எஸ்.ஜி.யால் கோல் அடிக்கமுடியவில்லை.

இதனால் பி.எஸ்.ஜி. அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 6-வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெற்று கோப்பையை தட்டிச்சென்றது. இந்த வெற்றியை பேயர்ன் முனிச் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Next Story