ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் கேரளா தோல்வி


ஐஎஸ்எல் கால்பந்து: முதல் போட்டியில் கேரளா தோல்வி
x
தினத்தந்தி 20 Nov 2020 7:24 PM GMT (Updated: 20 Nov 2020 7:35 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் உள்ள 3 ஸ்டேடியங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி அரங்கேறுகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் (கொல்கத்தா)- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. முதல் பாதியில் இரு அணியினரும் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற முடியாமல் கோட்டை விட்டனர். 4-வது, 18-வது, 34-வது நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளை கடந்த சீசனில் அதிக கோல்கள் அடித்து ஜொலித்த கொல்கத்தா அணி வீரர் ராய் கிருஷ்ணா வீணடித்து ஏமாற்றம் அளித்தார். 

அந்த அணியின் எடு கார்சியா 34-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடிக்க எடுத்த முயற்சி மயிரிழையில் நழுவியது. 37-வது நிமிடத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பை கேரளா அணி வீரர் ரித்விக் குமார் தாஸ் தவறவிட்டார். 14-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் மைக்கேல் சூசைராஜ் (தமிழகத்தை சேர்ந்தவர்) முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற் பாதியில் இரு அணிகளும் தங்களது ஆட்ட வேகத்தை அதிகரித்தனர். 50-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை கேரளா அணி வீரர் சஹால் அப்துல் சமத் சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கினார். 67-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோல் அடித்தது. எதிரணி தடுப்பு ஆட்டக்காரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து நூலிழையில் கோட்டை விட்டதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராய் கிருஷ்ணா மின்னல் வேகத்தில் செயல்பட்டு பந்தை வலைக்குள் திணித்தார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் கோல் இதுவாகும்.

அதன் பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

வாஸ்கோவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈட்ஸ் யுனைடெட் (கவுகாத்தி)-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story