ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Nov 2020 7:54 PM GMT (Updated: 23 Nov 2020 7:54 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் உள்ள 3 இடங்களில் ரசிகர்கள் அனுமதியின்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 11 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் வாஸ்கோவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ரபெல் கிரிவெல்லாரோ தலைமையிலான சென்னையின் எப்.சி. அணி, பீட்டர் ஹார்ட்லி தலைமையிலான ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை சந்திக்கிறது.

ஓவென் கோய்லே

2 முறை சாம்பியனும், கடந்த சீசனில் 2-வது இடத்தை பிடித்ததுமான சென்னை அணியில் அனிருத் தபா, எலி சபியா உள்ளிட்ட சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். புதிதாக வெளிநாட்டு வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அணியின் செயல்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக சபா லாஸ்லோ (ஹங்கேரி) உள்ளார்.

கடந்த சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து சரிவில் இருந்து மீண்டு வர வழிகாட்டிய ஓவென் கோய்லே இந்த முறை ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதேபோல் கடந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக கோல் அடித்த வல்ஸ்கிஸ்சும் அந்த அணியில் இணைந்துள்ளார். கடந்த காலங்களில் அரைஇறுதியை ஒரு முறையும் எட்டாத அந்த அணி தற்போது புதிய வீரர்கள் வருகையால் எழுச்சி காணும் என்று நம்பப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு...

சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 2 முறையும், ஜாம்ஷெட்பூர் ஒரு முறையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. வெற்றி கணக்குடன் போட்டியை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஐதராபாத் அணி வெற்றி

இதற்கிடையில் நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஐதராபாத் அணிக்கு 35-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அரிடேன் ஜீசஸ் கோலாக மாற்றினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

Next Story