இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தேர்வு


இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் தேர்வு
x
தினத்தந்தி 3 April 2021 11:28 AM GMT (Updated: 3 April 2021 11:28 AM GMT)

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி

இந்தியாவில், அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் துருக்கி சென்ற இந்திய பெண்கள் அணி, செர்பியா, ரஷியா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும் ஏப்ரல் 8 ஆம் தேதி , பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது. இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார். தமிழக காவல் துறையில் 'சப்-இன்ஸ்பெக்டராக' பணியாற்றி வருகிறார். இது குறித்து இந்துமதி கதிரேசன் கூறுகையில், துருக்கியில் நாங்கள் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடினோம். அந்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். துருக்கியில் நடந்த ஆட்டங்களுக்கு சங்கீதா பஸ்தோர் கேப்டனாக இருந்தார். இந்த இரண்டு போட்டிகளுக்கு நான் கேப்டனாக இருக்கப் போகிறேன். இது பெருமைமிக்க தருணமாக உணர்கிறேன் ''என்றார்.

கடலூரிலுள்ள மஞ்சகுப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள்தான் இந்துமதி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story