ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்
ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற மற்றும் முன்னாள் இந்திய கால்பந்து வீரரான பார்ச்சூனேட்டோ பிராங்கோ காலமானார்.
கோவா,
இந்திய கால்பந்து தேசிய அணியின் முன்னாள் வீரர் பார்ச்சூனேட்டோ பிராங்கோ. கடந்த 1959ம் ஆண்டு டிசம்பரில் கேரளாவின் எர்ணாகுளம் நகரில் ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நடந்தன. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் முதன்முறையாக சர்வதேச அளவில் பிராங்கோ விளையாடினார்.
கடந்த 1960ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக இடம் பெற்ற அவர் கடந்த 1962ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பைக்கான போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாடினார். இதில், இந்திய அணி 2வது இடம் பெற்றது.
கடந்த 1962ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் இறுதியாட்டத்தில் தென்கொரியாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்ற அணியிலும் பிராங்கோ இடம் பெற்றிருந்துள்ளார்.
கால்பந்து போட்டியில் இந்திய அணியின் முன்னாள் நடுகள வீரரான இவர், கோவாவில் வசித்து வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story