சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி இடமாற்றம் போர்ச்சுகல்லில் நடக்கிறது + "||" + The Champions League football final transfer takes place in Portugal
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி இடமாற்றம் போர்ச்சுகல்லில் நடக்கிறது
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி இடமாற்றம் போர்ச்சுகல்லில் நடக்கிறது.
லண்டன்,
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி-செல்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இங்கிலாந்து அரசு, கொரோனா அதிகரிப்பு காரணமாக துருக்கியை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது. எனவே துருக்கி நாட்டுக்கு பயணம் செய்ய இங்கிலாந்து நாட்டினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை நேரில் காண இங்கிலாந்து ரசிகர்கள் இஸ்தான்புல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதிப்போட்டியை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அதற்கு சரிப்பட்டு வராததால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. முடிவில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியை இஸ்தான்புல் நகரில் இருந்து போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்டோ நகருக்கு மாற்றப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சங்கம் நேற்று அறிவித்தது. போர்ச்சுகல் நாட்டுக்கு சென்று திரும்பும் இங்கிலாந்து நாட்டினர் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 29-ந்தேதி நடக்கும் இந்த போட்டியை காண இரு கிளப்புகளை சேர்ந்த தலா 6 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கான டிக்கெட்டை அவர்கள் வழக்கம் போல் தங்கள் கிளப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.