உலக கோப்பை தகுதி சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி தோகாவில் பயிற்சியை தொடங்கியது


உலக கோப்பை தகுதி சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி தோகாவில் பயிற்சியை தொடங்கியது
x
தினத்தந்தி 22 May 2021 10:18 PM GMT (Updated: 22 May 2021 10:18 PM GMT)

உலக கோப்பை தகுதி சுற்றுக்கான இந்திய கால்பந்து அணி தோகாவில் பயிற்சியை தொடங்கியது.

தோகா, 

2022-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கிறது. இதில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கத்தாரையும், 7-ந் தேதி வங்காளதேசத்தையும், 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் சந்திக்கிறது. இந்திய அணி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்தில் இருக்கிறது. உலக கோப்பை போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்சி முகாம் கொல்கத்தாவில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடக்க இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக இந்திய கால்பந்து அணி முன்கூட்டியே தோகா சென்று பயிற்சியில் ஈடுபட முடிவு செய்து கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டு தோகா சென்றடைந்தது. தோகாவில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய கால்பந்து அணியின் 28 வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியினர் நேற்று முன்தினம் தங்களது பயிற்சி முகாமை தொடங்கினர். தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மேற்பார்வையில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடும் காட்சியை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Next Story