கோபா அமெரிக்கா கால்பந்து: அரைஇறுதியில் பிரேசில், பெரு


கோபா அமெரிக்கா கால்பந்து: அரைஇறுதியில் பிரேசில், பெரு
x
தினத்தந்தி 4 July 2021 2:09 AM GMT (Updated: 4 July 2021 2:09 AM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில், பெரு அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

ரியோடிஜெனீரோ,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் ரியோடிஜெனீரோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி, முன்னாள் சாம்பியனான சிலியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் பாணியை கடைபிடித்தன. ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் கடுமையாக மல்லுக்கட்டினார்கள். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

46-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் மாற்று ஆட்டக்காரர் லூகாஸ் பக்யூட்டா கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி தன்வசப்படுத்த முயன்ற சிலி வீரர் எய்ஜெனியோ மினா மீது, பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் காலால் மிதித்தார். இதனால் கேப்ரியல் ஜீசஸ்க்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். அதன் பிறகு பிரேசில் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் சிலி அணியால் கடைசி வரை பிரேசிலின் தடுப்பு அரணை தகர்த்து பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதியில் பெரு-பராகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான 90 நிமிடம் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. முன்னதாக இந்த ஆட்டத்தின் போது பராகுவே அணியின் கேப்டன் குஸ்டாவோ கோமெஸ் 45-வது நிமிடத்திலும், பெரு அணி வீரர் ஆந்த்ரே காரில்லோ 85-வது நிமிடத்திலும் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. திரில்லிங்கான பெனால்டி ஷூட்-அவுட்டில் பெரு அணி 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ரியோடிஜெனீரோவில் நாளை நடைபெறும் அரைஇறுதியில் பிரேசில்-பெரு அணிகள் மோதுகின்றன.

Next Story