ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்? 2-வது அரைஇறுதி இன்று நடக்கிறது


ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்? 2-வது அரைஇறுதி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 July 2021 12:13 AM GMT (Updated: 7 July 2021 12:13 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்? 2-வது அரைஇறுதி இன்று நடக்கிறது.

லண்டன்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் (யூரோ) லண்டனில் இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து-டென்மார்க் அணிகள் மோதுகின்றன. பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இங்கிலாந்து நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்கவில்லை. அத்துடன் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்கவில்லை. 2-வது சுற்றில் ஜெர்மனியையும் (2-0), கால்இறுதியில் உக்ரைனையும் (4-0) புரட்டியெடுத்த இங்கிலாந்து மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும். கேப்டன் ஹாரிகேன், ரஹீம் ஸ்டெர்லிங் சூப்பர் பார்மில் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளூர் சூழலில் ஆடுவதால் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள டென்மார்க் முதல் இரு லீக்கில் தோற்றாலும் அதன் பிறகு எழுச்சி பெற்றது. குறிப்பாக அந்த அணி வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மீண்ட சம்பவத்திற்கு பிறகு டென்மார்க் வீரர்கள் உணர்வுபூர்வமாக விளையாடி வருகிறார்கள். கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வீழ்த்தி 29 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு வந்துள்ள டென்மார்க், இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் முனைப்புடன் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 12-ல் இங்கிலாந்தும், 4-ல் டென்மார்க்கும் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் டிரா ஆனது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story