சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்


சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2021 8:56 PM GMT (Updated: 21 Sep 2021 8:56 PM GMT)

சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்.

சென்னை,

11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 19-ந்தேதி கோவாவில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் போஸிதர் பான்டோவிச் (மான்ட்னெக்ரோ) நேற்று ஆன்லைன் மூலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய சீசன் தொடங்குவதற்கு முன்பாக எங்களது வீரர்களுக்கு 8 வார காலம் பயிற்சி முகாம் நடக்கிறது. ஒரு பயிற்சியாளராக நீண்ட கால பயிற்சி முகாமை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த 8 வார காலம் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் தினமும் ஆலோசனை நடத்துகிறோம். வருகிற 26-ந்தேதி முதல் பயிற்சியை தொடங்குகிறோம். மற்ற ஐ.எஸ்.எல். அணிகளுடன் 6-7 நட்புறவு பயிற்சி ஆட்டங்கள் நடத்துவது குறித்து கிளப் நிர்வாகத்திடம் பேசி இருக்கிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் எந்த அணிகள் பயிற்சி ஆட்டத்துக்கு ஆயத்தமாக உள்ளது? எப்போது அதை நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டி உள்ளது. தேதி முடிவானதும் அது குறித்து தெரிவிக்கிறேன்.

சென்னையின் எப்.சி. இளமையும், அனுபவமும் கலந்த அணியாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சில உள்நாட்டு வீரர்களும் உள்ளனர். நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். இனி கடினமாக உழைக்க வேண்டும். கடந்த சீசனில் சென்னை அணி 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அது பற்றி நான் பேசமாட்டேன். சாதனை புள்ளி விவரங்களை திருப்பி பார்க்கும் போது, சென்னை அணி அதிகமான கோல்கள் அடிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் அணியில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களால் கோல் அடிக்க முடியும் என்று நம்புகிறேன். யார் கோல் போடுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அணி வெற்றி பெற வேண்டும். இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story