தெற்காசிய கால்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி


தெற்காசிய கால்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 11 Oct 2021 10:00 PM GMT (Updated: 11 Oct 2021 10:00 PM GMT)

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது.

மாலே,

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் (1-1), இலங்கையுடன் (0-0) ‘டிரா’ கண்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 168-வது இடத்தில் உள்ள நேபாளத்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் ஆடிய இந்திய அணி கோல் அடிக்க பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், நேபாளத்தின் தடுப்பு அரணை எளிதில் தகர்க்க முடியவில்லை. கடைசியாக 82-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இடது காலால் உதைத்து பந்தை கோல் வலைக்குள் திணித்தார். 123-வது போட்டியில் ஆடிய சுனில் சேத்ரி அடித்த 77-வது கோல் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச போட்டியில் தலா 77 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பீலே (பிரேசில்), அலி மாப்ஹோட் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்தார். அதன் பிறகு பதில் கோல் திருப்ப நேபாளம் அணியினர் தீவிரம் காட்டினாலும், அவர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது. 3 லீக் ஆட்டங்கள் முடிவில் மாலத்தீவு, நேபாளம் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை வகிக்கின்றன. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவுடன் (இரவு 9.30 மணி) மல்லுகட்டுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

Next Story