சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி, பி.எஸ்.ஜி. அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி, பி.எஸ்.ஜி. அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 25 Nov 2021 7:44 PM GMT (Updated: 25 Nov 2021 7:44 PM GMT)

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் பி.எஸ்.ஜி. அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

மான்செஸ்டர், 

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். 

இதில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (ஜெர்மனி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனை (பி.எஸ்.ஜி.) வீழ்த்தியது. 

இன்னும் ஒரு லீக் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் மான்செஸ்டர் சிட்டி 12 புள்ளிகளுடனும், பி.எஸ்.ஜி. அணி 8 புள்ளிகளுடனும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து ‘நாக்-அவுட்’ சுற்றுக்குள் நுழைந்தன. 

இதேபோல் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஷெரிப் டிராஸ்போல் (மால்டோவா) அணியை தோற்கடித்தது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி) 2-0 என்ற கோல் கணக்கில் ஷக்தர் டோனெட்ஸ்க் (உக்ரைன்) அணியை வீழ்த்தியது. 

இந்த பிரிவில் இன்னும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் (12 புள்ளிகள்), இன்டர் மிலன் (10 புள்ளிகள்) அணிகள் முதல் 2 இடங்களை தனதாக்கி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.


Next Story