ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது கேரளா..!


image courtesy: Kerala Blasters FC twitter
x
image courtesy: Kerala Blasters FC twitter
தினத்தந்தி 12 March 2022 2:33 AM GMT (Updated: 12 March 2022 2:33 AM GMT)

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கோவாவில் நேற்று இரவு நடைபெற்ற முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்த ஜாம்ஷெட்பூர் அணி 4-வது இடம் பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது.

முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்த ஜாம்ஷெட்பூர் அணி தனது கடைசி 7 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சூப்பர் பார்மில் இருந்தது. மேலும் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்குள் நுழைந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4-4 என்ற கோல் கணக்கில் கோவாவுடன் ‘டிரா’ கண்ட கையோடு களம் இறங்கியது.

இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சியை வீழ்த்தியது. கேரள வீரர் சஹல் சமாத் 38-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் ‘டிரா’ செய்தாலே கேரளா இறுதிப்போட்டியை அடைந்து விடும். 

மற்றொரு அரைஇறுதியின் முதலாவது சுற்றில் ஐதராபாத் எப்.சி - ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் இன்று (இரவு 7.30 மணி) மோதுகின்றன.

Next Story