ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கேரளா பிளாஸ்டர்ஸ்


Image courtesy: Kerala Blasters
x
Image courtesy: Kerala Blasters
தினத்தந்தி 15 March 2022 4:15 PM GMT (Updated: 15 March 2022 4:16 PM GMT)

அரைஇறுதி போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கோவா, 

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதன் முதலாவது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூருக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று மீண்டும் இரு அணிகளும் மோதின. இன்றைய ஆட்டத்தில் கேரளா டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் போட்டி தொடங்கியது.

போட்டியின் 18-வது  நிமிடத்தில் கேரளா அணியின் லூனா முதல் கோல் அடித்தார். பின்னர் ஜாம்ஷெட்பூர் அணியின் ஹால்டேர் 50-வது நிமிடத்தில் அந்த அணியின் முதல் கோலை அடித்தார்.

அதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத காரணத்தால் போட்டி சமனில் முடிய  முதல் போட்டியில் கேரளா 1 கோல் அடித்து இருந்ததால் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி அரையிறுதி சுற்றில்  நாளை ஏ.டி.கே.மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Next Story