12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது


12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 26 Feb 2018 10:28 PM GMT (Updated: 26 Feb 2018 10:28 PM GMT)

2-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் நடக்கிறது.

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 2-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. ‘நாக்-அவுட்’ முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரி, கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை மாநகர போலீஸ், சாய், ஆக்கி அகாடமி, ஏ.ஜி.அலுவலகம் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. தினசரி பிற்பகல் 2.30 மணி மற்றும் மாலை 4 மணிக்கு போட்டி நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான பரிசுக் கோப்பை அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் கரத் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். செயல் இயக்குனர் ஏ.எஸ்.ராஜீவ், இந்தியன் வங்கி விளையாட்டு கமிட்டி தலைவர் மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 

Next Story