மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி


மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி
x
தினத்தந்தி 1 March 2018 9:07 PM GMT (Updated: 1 March 2018 9:07 PM GMT)

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘நாக்–அவுட்’ முறையில் வருகிற 7–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் இந்தியன் வங்கி இயக்குனர் பி.விட்டல்தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வகித்தார். இந்தியன் வங்கி விளையாட்டு கமிட்டி தலைவர் மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்க ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்)–வருமானவரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சாய் அணி 3 வாய்ப்புகளை கோலாக்கியது. வருமான வரி அணி 2 வாய்ப்புகளை மட்டுமே கோலாக மாற்றியது. முடிவில் சாய் அணி 4–3 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு ஜூனியர்–தமிழ்நாடு போலீஸ் (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே–ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story